விலக மாட்டேன், மீண்டும் தேர்தல்:சிபு அடம்!
டெல்லி: இடைத் தேர்தலில் தோற்று விட்டதால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். எனக்காக பாஜகவிலிருந்தும், எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் விலகியுள்ள விஷ்ணு பையாவின் ஜாம்தார் தொகுதியில் போட்டியிட்டு வெல்வேன் என்று அடம் பிடிக்கிறார் ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன்.
இந்திய அரசியலில் வித்தியாசமான அரசியல்வாதிகளில் ஒருவர் சிபு சோரன். முன்பு வாஜ்பாய் அரசு கவிழ காரணமாக இருந்தார். கடந்த ஆண்டு கொலை வழக்கில் சிக்கி தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் அதில் அப்பீல் செய்து விடுதலையாகி விட்டார்.
அதிலிருந்து வந்த பின்னர் பறிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பதவியை மறுபடியும் கேட்டார். ஆனால் அவர் டெல்லி பக்கம் வருவதை விரும்பாத காங்கிரஸ் தலைமை, உருப்படியாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த மது கோடாவிடமிருந்து முதல்வர் பதவியைப் பறித்து, சிபுவை ஜார்க்கண்ட் முதல்வராக்கியது.
முதல்வரானபோது எம்.எல்.ஏவாக இல்லை சிபு. இதையடுத்து காலியாக இருந்த தமர் தொகுதியில் போட்டியிட்டார் சிபு. முதல்வராக இருப்பதால் நிச்சயம் வென்று விடலாம் என தைரியமாகத்தான் இருந்தார் சிபு. ஆனால் பேரிடியாக அவருக்கு தோல்வியைக் கொடுத்து விட்டனர் தமர் வாக்காளர்கள்.
இதனால் சிபுவின் பதவிக்கு பேராபத்து ஏற்பட்டது. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் தான் பதவி விலகப் போவதில்லை என்று கூறி வருகிறார் சிபு.
நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தி்ப்பதற்காக டெல்லி வந்துள்ளார் சிபு.
அதற்கு முன்னதாக ஜார்க்கண்ட் மாநில விவகாரத்தை கவனிக்கும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மக்கானை சந்தித்துப் பேசினார் சிபு.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் பதவி விலக மாட்டேன். நான் இடைத் தேர்தலில் தோற்றவன்தான். இருப்பினும் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.
எனக்காக எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகிய பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏ. விஷ்ணு பையாவின் ஜம்தார் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்றார் சிபு.
சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை சந்திக்கவுள்ள சிபு அதன் பின்னர் இறுதி முடிவெடுக்கவுள்ளார். சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலையும் சந்திக்கவுள்ளார்.
சிபு சோரன் பதவி விலகுவதே நல்லது என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ், செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில்,
மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து சிபுசோரன் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் பதவி விலகுவதுதான் முதல் தீர்வு. பின்னர் அங்கு யார் முதல்- மந்திரி என்பது பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.
ஒரு வேளை முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு சோனியா அறிவுறுத்தினால் மத்திய அமைச்சர் பதவியை அவர் கோருவார் எனத் தெரிகிறது. தர மறுத்தால் ஆட்சிக்கு வழங்கி வரும் ஆதரவையும் அவர் திரும்பப் பெறத் தயங்க மாட்டார் என கருதப்படுகிறது. சிபுவின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 3 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்தாரில் பிப்ரவரியில் இடைத் தேர்தல்
இதற்கிடையே, சிபு சோரன் கூறி வரும் ஜம்தார் தொகுதியில் அடுத்த மாதம் 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் பாஜக வென்ற தொகுதியாகும்.
சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசனை
இதற்கிடையே, சிபு சிக்கல் குறித்து சட்ட நிபுணர்களை வரவழைத்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சையது சிப்தே ரஸி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications