ரயில்வே ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்-சேவை பாதிப்பு
நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் திடீரென நடத்திய போராட்டத்தால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களாக ரயில்வே பாதுகாப்பு படையின் அகில இந்திய கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆர்பிஎப் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கம் முடிந்து வடமாநிலங்களுக்கு ஆர்பிஎப் வீரர்கள் திரும்பி செல்ல வசதியாக அனந்தபுரி எக்ஸ்பிரசில் 4 சிறப்பு பெட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் ரயில்வே பாதுகாப்பு படையினர் சிலர் ஜமுதாவி எக்ஸ்பிரசில் சிறப்பு பெட்டி தருமாறு கேட்டனர். அதறகு வாய்ப்பில்லை என்று ரயில்வே ஊழியர்கள் கூறினர். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
இந்த பிரச்சனையின் போது ரயில்வே ஊழியர் செல்வமணி என்பவர் மயங்கி விழுந்தார். அவரை பாதுகாப்பு படையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசில் ரயி்ல்வே ஊழியர் செல்வமணி புகார் அளித்தார். அந்த புகாரில் ஆர்பிஎப் வீரர்கள் 3 பேர் தன்னை தாக்கியதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை ரயில்வே ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர். காலையில் கிளம்பவேண்டிய நகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டது. திருவனந்தபுரம்-நாகர்கோவில் பாசஞ்சர் ரயில், நெல்லை-நாகர்கோவில் பாசஞ்சர் ரயில்களும் நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக டிஎஸ்பி சந்திரபால் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் ரயில்வே ஊழியர் அளித்த புகாரின் பேரில் 3 ஆர்பிஎப் வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டங்கள் காரணமாக நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையம் இன்று காலையிலும் பரபரப்பாக இருந்தது. ரயில்வே ஊழியர்களின் திடீர் போராட்டம் காரணமாக பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் பரிதவித்து நின்றனர்.
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்து தாமதமாக ரயில்கள் அனைத்தும் புறப்பட்டுச் சென்றன.












Click it and Unblock the Notifications