ரூ100 விற்ற பெட்ரோல்-300 பஸ்கள் நிறுத்தம்
சென்னை: பெட்ரோல், டீசல் பஞ்சத்தைப் பயன்படுத்தி கள்ளச் சந்தையில் லிட்டர் பெட்ரோல் ரூ. 100க்கு விற்ற கொடுமை சென்னையில் நடந்தது.
கடந்த புதன்கிழமை முதல் எண்ணை நிறுவன அதிகாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். நேற்று இரவுதான் ஸ்டிரைக் திரும்பப் பெறப்பட்டது.
இருப்பினும் இன்னும் நிலைமை சரியாகவில்லை. கடந்த புதன்கிழமை முதல் கள்ளச் சந்தையில் பெட்ரோல், டீசல் பல மடங்கு அதிக விலை வைத்து விற்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் கிடைக்காதவர்கள் இந்த கள்ளச்சந்தை வியாபாரிகளைத்தான் நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ரூ.49.66க்கு விற்பனையாகிறது. ஆனால் கள்ளச்சந்தையில் ரூ. 100 வரை விலை வைத்து அநியாய விற்பனையில் சிலர் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு பெட்ரோல் பங்கு ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் எழும்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பகிரங்கமாவே அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விற்றுள்ளனர்.
அதேபோல வேறு சில பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளிலும் கூடுதல் விலைக்கு பெட்ரோல், டீசலை விற்றுள்ளனர்.
மேலும், கேன்களுடன் வருவோருக்கு முறையான அளவில் தராமல் இஷ்டத்திற்கு ஊற்றிக் கொடுத்துள்ளனர். கேட்டால், நெருக்கடியான நேரத்தில் இதெல்லாம் பார்க்காதீர்கள் என்று திட்டலுடன் கூடிய அட்வைஸையும் வழங்கி மக்களின் வயிறை எரிய வைத்தனர்.
300 அரசு பஸ்கள் நிறுத்தம்:
நெல்லை, தூத்துக்குடியில் டீசல் தட்டுபாட்டால் நேற்று 300 அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.
நெல்லையில் நேற்று ஓரளவு விநியோகம் செய்யப்பட்டதால் இருப்பில் இருந்த பெட்ரோல், டீசலை தங்களது வாகனங்களில் நிரப்ப அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கூட்டம் அலைமோதியது.
ஆனால் இரவில் ஸ்டாக் இல்லை என கூறி பங்குகளை முழுமையாக மூடி விட்டனர். இதனால் நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஓவ்வொரு பங்குகளிலும் சென்று ஏமாற்றத்துடன் சென்றன.
சில பங்குகள் இரு சக்கர வாகனங்களுக்கு சப்ளையை நிறுத்தி விட்டு வாடகை வாகனங்களுக்கு மறைமுகமாக ரேஷன் முறை விநியோகம் செய்தனர்.
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் 13 டெப்போக்களிலிருந்து தினசரி 823 பஸ்கள் உள்ளன. இதில் 764 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
நகர பகுதிகளில் 435 பஸ்களும், புறநகர் பகுதிகளில் 329 பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களை இயக்க தினசரி 65 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படும். இந்நிலையில் டீசல் தட்டுப்பாடு காரணமாக நேற்று முன்தினம் முதல் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று காலை பஸ்களை இயக்க டீசல் இல்லாததால் பெரும்பாலான டொப்போக்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தை பொறுத்துவரை இதுவரை 300க்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் நிறுத்தப்பட்டத்தால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications