திருவண்ணாமலை: கள்ளச் சாராயம் குடித்த 4 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தனிப்பாடி என்ற இடத்தில் கள்ளச்சாராயம் குடித்த நான்கு பேர் பலியானார்கள்.
தனிப்பாடி அருகே உள்ளது போந்தை என்ற கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோபால்சாமி, ஜெயராமன். மோட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்.
போந்தை கிராமத்தில் நேற்று இந்த மூன்று பேரும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்தனர். அதேபோல சின்னத் தன்டா கிராமத்தைச் சேர்ந்த தோளா மற்றும் சுவாளி ஆகிய இரு பெண்களும் கள்ளச்சாராயம் பருகியுள்ளனர்.
குடித்த சில நிமிடங்களிலேயே நான்கு பேருக்கும் வாந்தி, பேதி மற்றும் தலை சுற்றல் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே கோபால், ஜெயராமன் ஆகிய இருவரும் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
மற்ற 3 பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களில் கோபால்சாமி உயிரிழந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுவாளியும் உயிரிழந்தார்.
இதனால் அந்த கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் மற்றும் அதிகாரிகள் விரைந்துள்ளனர். கள்ளச்சாராயம் விற்ற நபர் தலைமறைவாகி விட்டார்.