ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கிராமங்கள்-16ம் தேதி அலங்காநல்லூரில்!
தமிழர்களின் வீர விளையாட்டாக வர்ணிக்கப்படுவது ஜல்லிக்கட்டு. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது.
இத்தகைய ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. அதிலும் அலங்காநல்லூரில் நடைபெறும் பிரமாண்ட ஜல்லிக்கட்டுதான் உலகப் பிரசித்தி பெற்றது.
ஜல்லிக்கட்டுக்கு கடந்த சில ஆண்டுகளாக சிக்கல்கள் பல. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜல்லிக்கட்டை செய்தது உச்சநீதிமன்றம். இதனால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள், குறிப்பாக ஜல்லிக்கட்டை நடத்தும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பொங்கலைக் கொண்டாடாமல் துக்கம் அனுசரித்தனர். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் பலனாக ஜல்லிக்கட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் வந்து விட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டை நடத்த கிராமங்கள் தயாராகி வருகின்றன.
புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஊரே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
அதேபோல பாலமேட்டில் 15ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
சமீப காலமாக புகழ் பெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கல் தினமான நாளை நடைபெறவுள்ளது.
இதுதவிர காஞ்சரம்பேட்டை, கரடிக்கல், நல்லூர், ஆனையூர், வலையப்பட்டி, சின்னக் கட்டளை, உறங்கான்பட்டி, சக்குடி, வி்ல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு அடுத்த 3 மாதங்களுக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக தடை செய்யக் கோரி உச்சநீதி்மன்றத்தில் பிராணிகள் நல வாரியம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.