பிப். 12ம் தேதி கூடுகிறது நாடாளுமன்றம்
டெல்லி: நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 12ம் தேதி கூடுகிறது.
லோக்சபாவுக்கு ஏப்ரல் - மே மாத கால கட்டத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அதற்கு முன்பாக நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படுகிறது. அதன்படி பிப்ரவரி 12ம் தேதி நாடாளுமன்றம் கூடுவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு நடைபெறக் கூடும். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தேர்தலுக்கு முன்பு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடர்தான் நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு முக்கியப் பிரச்சினைகளுடன் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் புயலைக் கிளப்ப காத்துள்ளதால் இந்தக் கூட்டத் தொடரும் 'வழக்கம் போல' அமளி துமளியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.