புதிய பதவியை ஏற்றுள்ள மு.க.அழகிரிக்கு பாராட்டு விழா நடத்த திட்டம்
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தல் வெற்றி மற்றும் தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது ஆகியவற்றை இணைத்து மதுரையில் மு.க.அழகிரிக்கு பிரமாண்டமான பாராட்டு விழாவினை நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார் மு.க.அழகிரி. யாரும் நினைத்துப் பார்த்திராத வகையில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுக அங்கு வெற்றி பெற முக்கிய காரணம் அழகிரியும், அவரது சுறு சுறு தொண்டர் படையுமே முக்கிய காரணம்.
இதைப் பாராட்டும் வகையில், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் பதவி அழகிரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட திமுக கழகங்கள் அழகிரியின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து இங்கு கட்சியை மேலும் பலப்படுத்தும் பணியில் அழகிரி தீவிரமாகியுள்ளார். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளை அவர் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளார்.
கட்சிக்கு எங்கெல்லாம் பலவீனம் இருக்கிறதோ அவற்றையெல்லாம் சரி செய்து, கட்சியை வலுப்படுத்தப் போகிறாராம் அழகிரி.
வருகிற லோக்சபா தேர்தலில் தென் மாவட்டங்களை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் எனவும் அவர் சபதமிட்டுள்ளாராம்.
இந்த நிலையில் திருமங்கலம் வெற்றி மற்றும் புதிய பதவி ஆகியவற்றையொட்டி மதுரையில் பிரமாண்டமான அளவில் பாராட்டு விழா நடத்த அழகிரியின் ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அழகிரி ஸ்டைல் தேர்தல் பணிகள் மதுரை வட்டாரத்தில் மிகவும் பாப்புலர். இனி இந்த பாணி, தென் மாவட்டங்கள் முழுவதும் பரவும் என்பதால் திமுகவினர் மிகுந்த நம்பிக்கையில் உள்ளனர்.
முன்பு அதிமுக மட்டுமே திமுகவின் எதிரியாக இருந்தது. இப்போது தேமுதிக என்ற புதிய எதிரியும் வலுவாகி வருவதால் அவர்களையும் சேர்த்து சமாளிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது.
இந்த இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளையும் உடைத்து, கணிசமான வாக்குகளை திமுக பக்கம் திருப்பிக் காட்டுகிறேன் என சபதமிட்டுள்ளாராம் அழகிரி.
அழகிரி சொல்ல மாட்டார். சொன்னால் செய்யாமல் விட மாட்டார். எனவே தென் மாவட்டங்களை திமுகவின் கோட்டையாக மாற்றுவேன் என்று அவர் கூறியிருப்பது நிச்சயம் அதிமுக, தேமுதிகவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கப் போவது உண்மை என்று அழகிரி தொண்டர்கள் இப்போதே சந்தோஷிக்க ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications