அதிமுக-தேமுதிக உருட்டுக் கட்டை 'அடிதடி'!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக அதிமுக, தேமுதிக தொண்டர்கள் அடித்துக் கொண்டு உருண்டனர்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 92வது பிறந்த நாளையொட்டி நாகர்கோவில் வடசேரி சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் இன்று காலை மாலை அணிவித்துக் கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் ஏராளமான தேமுதிகவினரும் எம்ஜிஆர் சிலை முன் திரண்டனர். ஆனால் அதிமுகவினர் மாலை அணிவித்து முடிந்ததும் அங்கிருந்து போகாமல் சிலை அருகிலேயே நின்றிருந்தனர்.
இதையடுத்து நாங்களும் மாலை போட வேண்டும், எம்ஜிஆர் சிலையின் கையில் நீங்கள் கட்டியுள்ள கொடியை அகற்றுங்கள் என்று அதிமுகவினரிடம் தேமுதிகவினர் கூறினர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸ் ஏட்டு ஒருவரும் கொடியை அகற்றுமாறு அதிமுகவினரிடம் கேட்டு கொண்டார். ஆனால், அதை அதிமுகவினர் ஏற்க மறுத்து விட்டனர்.
இந் நிலையில் தேமுதிகவினர் மாலை அணிவிக்க ஆரம்பித்தனர். அதில் சிலர் தேமுதிக கொடியால் எம்ஜிஆர் சிலையில் இருந்த அதிமுக கொடியை மறைத்தனர். இதற்கு அதிமுகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அதிமுகவினர் தேமுதிகவினரை நோக்கி சரமாரியாக கற்களை வீச தொடங்கினர். இதையடுத்து மோதல் உருவானது. ஒருவருக்கொருவர் கைகளில் உருட்டுக் கட்டைகள், தடிகள் மற்றும் கம்புகளால் தாக்கிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி அடித்துக் கொண்டனர்.
இதையடுத்து டிஎஸ்பி சந்திரபால் தலைமையிலான போலீசார் அதிமுகவினரையும், தேமுதிகவினரையும் தடுக்க முயன்றனர். ஆனாலும் இரு தரப்பினரும் தொடர்ந்து கல்வீசித் தாக்கி கொண்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் கூட்டத்தினர் சிதறி ஓடினர். கல்வீச்சு சம்பவத்தில் தேமுதிகவை சேர்ந்த முத்துகுமார், மற்றும் கோபால் ஆகியோருக்கு மண்டை உடைந்தது. உடனடியாக அவர்கள் இருவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எம்ஜிஆர் படத்துக்கு விஜயகாந்த் மாலை:
இந் நிலையில் தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் எம்ஜிஆரின் படத்திற்கு அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications