குளிரில் உறைந்த கோவை-நீலகிரி
கோவை: கோவை மற்றும் நீலகிரியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் ஸ்வட்டர் விற்பனை சூடு பிடித்துள்ளது.
ஊட்டியில் குளுகுளு சீசன் என்றால் அருகில் இருக்கும் கோவையிலும் குளுமையான தட்ப வெப்பநிலை நிலவும்.
இதனால் கோவையின் தட்பவெப்ப நிலை சுகமானதாக இருக்கும். கோவையின் குளுகுளு சீசனை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது என்ற அளவுக்கு சுகமானதாக இருக்கும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊட்டியில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் கோவையில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் கடும் குளிர் அடிக்கிறது.
பகலில் வெயில் அடித்தாலும் குளிர்ந்த காற்று வீசுவதால் வாகனங்களில் செல்பவர்கள் சொட்டர் அணியாமலி செல்ல முடிவதில்லை. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் கட்டுக்கடங்காமல் உள்ளது.
கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் சளி, காய்ச்சல், தலைவலி ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஸ்வெட்டர் மற்றும் கம்பளி விற்பனை சூடுபிடித்துள்ளது.
காந்திபுரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள சொட்டர் கடைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சொட்டர் தேவை அதிகமானதை தொடர்ந்து அவற்றின் விலையை அதிகரித்து விட்டனர். சொட்டர் வாங்குபவர்களும் வேறு வழியின்றி விற்கும் விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. மாலை 5 மணிக்கே குளிரத் தொடங்கி விடுகிறது. நேரம் செல்லச் செல்ல குளிர் மிகவும் அதிகரிக்கிறது. குளிரின் உச்சகட்டமாக ஊட்டியில் இன்று உறைபனி கொட்டியது. எங்கு பார்த்தாலும் வெண்பட்டு போர்த்தியது போல் காணப்பட்டது.
உறைபனி காரணமாக வெப்பநிலை மிகவும் குறைந்தது. இன்றைய வெப்ப நிலை 5 டிகிரி செல்சியஸ். குளிரில் இருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகள் தீ மூட்டி குளிர் காய்வதை காண முடிந்தது.