சந்த்ராயன்-2: நிலவுக்கு ரோபா அனுப்பும் இந்தியா
சென்னை: இஸ்ரோ விஞ்ஞானியும் நிலவுக்கு செலுத்தப்பட்ட சந்த்ராயன் விண்கலத் திட்டத்தின் இயக்குனருமாந மயில்சாமி அண்ணாதுரை, முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருடன் மனைவி வசந்தியும் உடன் இருந்தார்.
மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்தி்ப்பின்போது, மயில்சாமியின் ஊர், பெற்றோர் பற்றிய விவரங்களை முதல்வர் கேட்டார். அப்போது முதல்வர் மீது தனது பெற்றோர் வைத்துள்ள அன்பு, மரியாதை குறித்து மயில்சாமி விளக்கினார்.
சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ள சந்த்ராயன் செயற்கைக்கோளின் செயல்பாடுகள், அடுத்த திட்டங்கள் ஆகியவை குறித்து மயில்சாமியிடம் கருணாநிதி ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய மயில்சாமி,
மரியாதை நிமித்தமாகத் தான் முதல்வரை சந்தித்தோம். என் பெற்றோர் முதல்வர் கருணாநிதி மீது மிகுந்த மரியாதையும், ஈடுபாடும் கொண்டவர்கள். சமீபத்தில் நான் ஊருக்குப் போனபோது எனது தாயார், முதல்வரை சந்தித்தாயா என்று தான் கேட்டார். நான் அவரை சந்தித்த செய்தி கேட்டு எனது தாயார் மிகுந்த மகிழ்ச்சியடைவார்.
சந்த்ராயனை வெற்றிகரமாக ஏவிய தினத்தன்று முதல்வசர் கருணாநிதி உடனே எனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். அதன்பிறகு, நவம்பர் 14ம் தேதியும் வாழ்த்து கடிதம் எழுதியிருந்தார்.
சந்த்ரயான்-2 செயற்கைக் கோளை நிலவுக்கு ஏவும் திட்டம் ரூ.450 கோடியில் செயல்படுத்தப்படும். இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. 2011ம் ஆண்டு இறுதி அல்லது 2012ம் ஆண்டு துவக்கத்தில் சந்த்ராயன்-2 செலுத்தப்படும்.
இந்த செயற்கைக் கோள், நமது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவப்படும். அதில் ஒரு சிறிய கார் போன்ற ரோபோவும் நிலவுக்கு அனுப்பப்படும்.
அது சந்திரனில் தரையிறங்கி சோதனையிடும். இந்த ரோபோ, ரஷ்ய ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டு வருகிறது என்றார்.