4வது நாளாக உண்ணாவிரதம்: திருமா மயக்கம்
சென்னை: இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 4வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது.
கடந்த 15ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய அவர் வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி வருகிறார்.
இன்று காலை அவர் மிகவும் சோர்வுடன் மயங்கிய நிலையில் காணப்பட்டார். பேண்ட், சட்டை உடையிலிருந்து லுங்கிக்கு மாறியிருந்த அவர் நாற்காலியில் துவண்டு போய் காணப்படுகிறார்.
அவரது உடலை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின்றனர். ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போய்விட்டதால் அவருக்கு மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டு வருகிறது. வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவதால் வயிற்று புரட்டலும் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவி்த்தனர்.
திருமாவளவனின் தாயார் பெரியம்மா, தம்பி செங்குட்டுவன் ஆகியோர் அவர் அருகிலேயே இருந்து கவனித்து வருகின்றனர்.
இந் நிலையில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் நிர்வாகக் குழுக் கூட்டம் உண்ணாவிரத பந்தல் அருகே நடக்கிறது. இதில் பங்கேற்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் குவிந்துள்ளனர்.
உண்ணாவிரதத்தை திருமாவளவன் கைவிடுவாரா என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.
திருமாவளவனின் தாயார் பெரியம்மா கூறுகையில்,
திருமா உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அதை அவன் உடனே கைவிட வேண்டும். இங்கு கூடியிருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து திருமாவை உண்ணாவிரதம் இருக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று கண் கலங்கினார்.
உண்ணாவிரத பந்தலில் திருமாவளவனுடன் ரவிக்குமார் எம்.எல்.ஏ., நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் இருந்தனர். இயக்குனர் அமீர், திருமாவளவனுக்கு சால்வை அணிவித்தார்.
உண்ணாவிரதம் தீவிரமடைந்ததால் மாநிலம் முழுவதும் இருந்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாகனங்களில் வந்து குவிந்து வருகின்றனர்.