தாமிரபரணியுடன் 3 நதிகளை இணைக்கும் திட்டம்-பிப் 9ல் அடிக்கல்
நெல்லை: தமிழக நதிகளை இணைக்கும் பெரும் திட்டத்தை வரும் பிப்ரவரி 9ம் தேதி பாளையங்கோட்டையில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
தேசிய அளவில் நதிகளை இணைக்கும் திட்டம் மத்திய அரசின் அலட்சியம் மற்றும் சில மாநில அரசுகளின் சுய நலத்தால் தாமதமாகி வருகிறது.
இதையடுத்து முதல் கட்டமாக மாநிலத்துக்குள் ஓடும் நதிகளை இணைப்பது என தமிழகம் முடிவு செய்தது. அதன்படி முதல் திட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை கருமேனியாறு, பச்சையாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளுடன் இணைக்க ரூ. 369 கோடி செலவில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் 13 டிஎம்சி நீர் உபரியாக ஓடி கடலில் கலந்து வீணாகிறது. இதி்ல் 2.76 டிஎம்சி நீரை 73 கி.மீ. நீள கால்வாய் மூலம் தூத்துக்குடி மாவட்டம் எல்.எல்.சேரிக்கு கொண்டு செல்ல இத் திட்டம் வழி வகுக்கும்.
வழியில் கருமேனியாறு, பச்சையாறு, நம்பியாறு ஆகியவற்றையும் இந்தக் கால்வாய் இணைக்கும். இதனால் சாத்தான்குளம், ராதாபுரம் ஆகிய வறண்ட பகுதிகளுக்கு பாசன வசதி உருவாக்கப்படும்.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பிப்ரவரி மாதம் 9ம் தேதி பாளையங்கோட்டையில் நடக்கிறது.