தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார்-பாஜக
கோவை: வரும் மக்களவைத் தேர்தலி்ல் தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட பாஜக தயாராக இருப்பதாக அக் கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
ஒரு பத்திரிக்கையாளர் மூலம் அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக முயன்று தோற்றது. இதையடுத்து ரஜினியின் ஆதரவைப் பெற மூத்த தலைவர் அத்வானி முயன்று தோற்றார்.
இதையடுத்து தேமுதிக தலைவர் விஜய்காந்துடன் கூட்டணிக்கு பாஜக முயன்றது. அங்கும் வெற்றி கிடைக்கவில்லை.
இதனால் தமிழகத்தில் தனித்தே போட்டியிட வேண்டிய நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து கோவையில் நிருபர்களிடம் பேசிய கணேசன்,
இலங்கை அரசு, இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் மீறியுள்ளது. இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையல்ல. இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்து பேசினால், நிரந்தர தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்தால், 6 மாதத்தில் இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். பிரதமர் வேட்பாளரான அத்வானி இதில் உறுதியாக இருக்கிறார்.
தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது என்று ராஜபக்சே சொல்வதை ஏற்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிரோடு பிடிக்கவே முடியாது.
வரும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட தயாராக உள்ளது. கூட்டணிக்கு மற்ற கட்சிகள் விரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்றார்.