பஸ்களை தாக்கினால் 'குண்டாஸ்'-டிஜிபி எச்சரிக்கை
சென்னை: பஸ்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் குரலை உயர்த்தி உண்ணா நோன்புகள், பேரணிகள், மனிதச் சங்கலிகள் போன்ற எல்லாவகையான அறப் போராட்டங்களையும் நிகழ்த்தி, அத்துடன் டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்து பேசியுள்ள சூழ்நிலையில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கால வரையற்ற உண்ணாநோன்பு மேற்கொண்டுள்ளார்.
அவரை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று உண்ணா நோன்பை விலக்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.
இந் நிலையில் சமூக விரோதச் செயலில் ஈடுபடுகின்ற சில கும்பல்களும் தங்களுடைய ஆத்திரத்தைக் காட்டுவது போல் அரசுக்குச் சொந்தமான பொதுமக்களுக்குப் பயன்படுகிற போக்குவரத்து சாதனங்களைக் கொளுத்தியும் உடைத்தும் அராஜக வெறியாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுவரை சுமார் 10 பேருந்துகள் தீ வைப்புக்கும், உடைப்புக்கும் உள்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் பொது அமைதிக்கும், பொது மக்களுடைய உயிர் பாதுகாப்புக்கும் உடைமைகளுக்கும் ஏற்படுகின்ற இழப்பை மேலும் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்பதால் அவர்களில் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இத்தகைய சட்ட விரோதமான செயல்களிலே ஈடுபடுவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.