காட்டாங்கொளத்தூர் திமுக பிரமுகர் கொலை
சென்னை: காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய குழு தலைவர் முனிராஜ் இன்று காலை அவரது வீட்டின் அருகே முகமூடி அணிந்த மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி ஜி.எஸ்.டி. சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றியக் குழு தலைவராகவும், பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் முனிராஜ் (55).
இவரது வீடு சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகே உள்ளது. தினமும் காலை வீட்டின் அருகே உள்ள ஒரு கடைக்கு சென்று டீ குடித்து விட்டு பத்திரிகை படிப்பது அவரது வழக்கம்.
வழக்கமாக முனிராஜ் டீ சாப்பிட வரும்போது அவருடைய ஆதரவாளர்கள் கடையில் இருப்பார்கள். ஆனால் இன்று காலை 6.50 மணிக்கு அவர் டீக்கடையில் இருந்த போது அவரது நண்பர் ஒருவர் மட்டுமே இருந்தார்.
அப்போது முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று டீக்கடைக்குள் நுழைந்தது. அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் முனிராஜை சரமாரியாக வெட்டினர்.
அவருடைய நண்பர் முனிராஜை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் முகமூடி கும்பல் முனிராஜை சரமாரியாக வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிவிட்டன. அதே இடத்தில் முனிராஜ் இறந்தார்.
இந்த தகவல் பரவியதும் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
முனிராஜின் கொலைக்கு முன் விரோதமே காரணம் என்றும் கூறப்படுகிறது. முனிராஜின் தம்பி ராமு 2 ஆண்டுகளுக்கு முன் மர்ம ஆசாமிகளால் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களே இவரையும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தகவல் அறிந்ததும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பெருமாள் கோயிலுக்கு வந்து முனிராஜ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.