பள்ளத்தில் இறங்கிய பஸ்-பயணி பலி
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலையில் இருந்த பெரிய பள்ளத்தில் பஸ் இறங்கியதில், கடைசி சீட்டில் பயணம் செய்த பயணி மேற்கூரையில் தலை மோதியதில் மரணமடைந்தார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த வாரிபள்ளி கிராமத்தில் வசித்தவர் விவசாயி நாகேஸ்வர ராவ் (வயது 42). நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் பஸ்சில் ஏறினார்.
கூட்டம் அதிகமிருந்ததால் நாகேஸ்வர ராவ் பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்தார்.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் சாலையில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது கவனக்குறைவுடன் ஓட்டிய டிரைவர் பாலத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த பள்ளத்தில் பஸ்சை இறக்கி ஏற்றினார். இதில் பயணிகள் பஸ்குக்குள் தூக்கியடிக்கப்பட்டனர்.
கடைசி சீட்டில் அமர்ந்திருந்த நாகேஸ்வர ராவ் மற்றும் சென்னையை சேர்ந்த சுப்பிரமணி இருவரும் பஸ்சின் மேற்கூரையில் மோதினர். அவர்களின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதை பார்த்த மற்ற பயணிகள் கூப்பாடு போட்டு பஸ்சை நிறுத்தினார்கள். இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதிக ரத்தபோக்கு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் நாகேஸ்வர ராவ் மரணமடைந்தார். காயம் அடைந்த சுப்பிரமணிக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ் டிரைவர் சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications