போலீஸ் மீது 'ஜல்லிக்கட்டு' நடத்திய கேடி!
கொல்லம்: பிடிக்க வந்த போலீஸாரிடமிருந்து தப்பிக்க, ஜல்லிக்கட்டு காளையை ஏவி விட்ட குற்றவாளியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த எதிர்பாராத தாக்குதலில் சப் இன்ஸ்பெக்டர், 2 கான்ஸ்டபிள்கள் காயமடைந்தனர்.
கேரளாவில் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. சுதாரித்த போலீஸார், ஜல்லிக்கட்டுக் காளையை சமாளித்து அடக்கி, பின்னர் அதை ஏவி விட்ட குற்றவாளியையும் மடக்கிப் பிடித்தனர்.
கொல்லத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு அப்பகுதியில் வேட்டுக்குட்டன் என்ற பட்டப் பெயரும் உண்டு. ஆள் பார்க்க குள்ளமாக இருந்தாலும், காளைகளை அடக்குவதிலும், பாம்பு பிடிப்பதிலும் திறமைசாலியாம். அதனால்தான் இந்த வேட்டுக்குட்டன் பட்டப் பெயர்.
இவர் மீது பல வழக்குகள் உள்ளன. கை தேர்ந்த கிரிமினலும் கூட. குண்டர் சட்டத்தின் கீழும் பலமுறை கைதானவர்.
இவரை பல வழக்குகள் தொடர்பாக போலீஸார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பிரகாஷ் பதுங்கியிருக்கும் இடம் குறித்து சப் இன்ஸ்பெக்டர் விஜயனுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து 3 போலீஸாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார் விஜயன்.
போலீஸார் வந்ததை அறிந்ததும் தப்பிக்க முயன்றான் பிரகாஷ். யானைகளுக்கு அணிவிக்கப்படும் ராட்சத மணியை எடுத்து போலீஸாரை தாக்கியுள்ளான்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட போலீஸார் அதிலிருந்து தப்பினர். இதையடுத்து அங்கு கட்டப்பட்டிருந்த, தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த காளையை அவிழ்த்து விட்டுள்ளான் பிரகாஷ்.
இதை போலீஸார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கட்டவிழ்த்து விடப்பட்ட அந்த ஜல்லிக்கட்டுக் காளை போலீஸார் மீது பாய்ந்தது.
இதில் சப் இன்ஸ்பெக்டரும், 2 காவலர்களும் லேசான காயமடைந்தனர். இருப்பினும் அங்கிருந்த பெரிய கயிற்றை எடுத்து காளையை துணிச்சலுடன் அடககி மடக்கினர் போலீஸார்.
பின்னர் காளையை ஏவி விட்டு தாக்கிய பிரகாஷையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவனை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
ஜல்லிக்கட்டுக் காளையை ஏவி தாக்கிய பிரகாஷை, காவல் நிலையத்தில் குமுறிக் கட்டியிருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா..












Click it and Unblock the Notifications