கடல் கொள்ளையர்கள் சுட்டு குமரி மீனவர் பலி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மீனவர் ஒருவர் ஈரான் எல்லையில் கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளி சந்தை நகருக்கு அருகில் உள்ள அழிக்கால் கிராமத்தை சேர்ந்த மீனவர் டீயன்சன். கடந்த 10 ஆண்டுகளாக இவர் செளதி அரேபியாவில் மீன் பிடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு ஏசுமேரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். டீயன்சன் கடைசியாக கடந்த ஆண்டு ஊருக்கு வந்தார்.
இந்நிலையில் டீயன்சன் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் ஒரு படகில் சவுதி அரேபியா மற்றும் ஈரான் எல்லை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். டீயன்சன் படகை ஓட்டி சென்றார்.
அப்போது அங்கு விசைப்படகில் வந்த கடல் கொள்ளையர்கள் டீயன்சன் படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் டீயன்சன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.
டீயன்சன் உடலை ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகள் செய்யுமாறு அவரது உறவினர்கள் வெள்ளி சந்தை போலீசில் மனு செய்தனர். டீயன்சன் மறைவினால் அழிக்கால் கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது.