'இலங்கை தமிழர்': மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
சென்னை: இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி நாளை முதல் தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் சென்னையில் நடந்தது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளராக சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவர் கே.வெங்கடாசலம் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் வெங்கடாசலம் கூறுகையில், அப்பாவி தமிழர்களை காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்தும், சாவின் விளிம்பில் உள்ள 5 லட்சம் ஈழத் தமிழர்களை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாளை முதல் தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், இந்த போராட்டத்தை அனைத்து ஜனநாயக மாணவர் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டும் என்றார் வெங்கடாச்சலம்.
இந்தப் போராட்டகத்தி்ல் பங்கேற்பதாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும் அறிவித்துள்ளது.