தட்ஸ்தமிழால் புது வாழ்வு பெற்ற சிறுமி திவ்யதர்ஷினி

புதுக்கோட்டை அருகே உள்ள பொன்னமரவாதியை பூர்வீகமாக கொண்டவர் லதா. இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ராசா என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மகிழ்ச்சியாக சென்ற மணவாழ்க்கையின் அத்தாட்சியாக ராசா - லதா தம்பதிக்கு திவ்வியதர்ஷிணி(4), விக்னேஸ்வரி(3) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
காலத்தின் கோலம் ராசாவுக்கும், லதாவுக்கும் வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ராசா, லதாவை விட்டு விலகினார்.
இரு குழந்தைகளுடன் தனித்து விடப்பட்ட லதா, பெற்றோரிடம் தஞ்சம் புகுந்தார். குழந்தைகளை கரை சேர்க்கவும், குடும்பத்தை பராமரிக்கவும் திருச்சி உறையூரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தான் திவ்வியதர்ஷிணிக்கு அடிக்கடி சளி பிடித்து உடல் நலம் பாதித்தது. டாக்டரிடம் திவ்வியதர்ஷிணியை அழைத்துச் சென்று பரிசோதித்ததில், சிறுமியின் இதயத்தில் ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சியைச் சேர்ந்த பிரபல தனியார் மருத்துவனையில் ஆலோசனை கேட்டபோது, உடனடியாக ASD CLOSURE SURGERY என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இந்த சிகிச்சைக்கு ரூ 1,05,000 தேவைப்பட்டது. மேலும் தொடர் மருந்து எடுத்துக் கொள்ள ரூ 50,000 தேவைப்பட்டது.
வேலைக்கு சென்றால் தான் அடுத்த வேலை உணவு என்ற நிலையில் இருந்த லதா இந்த செலவை எப்படி சமாளிப்பது என்று வேதனையில் மூழ்கினார்.
இந்த செய்தியை தட்ஸ்தமிழில் வெளியிட்டிருந்தோம்.
செய்தியை படித்த கருணை உள்ளம் கொண்ட பல வாசகர்கள், தாராளமாக லதாவிடம் நேரடியாக நிதியுதவி செய்தனர்.
அதே போன்று அந்த சிறுமி மீது பாசமும், கருணையும் கொண்ட திருச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வாழும் நல்ல உள்ளங்களும் நிதி உதவி செய்தனர்.
இதையடுத்து சிறுமி திவ்வியதர்ஷிணிக்கு உடல் பிரிசோதனை நடத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று ASD CLOSURE SURGERY அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
தற்போது சிறுமி திவ்வியதர்ஷிணி உடல் நலத்தோடு நல்ல நிலையில் உள்ளார் என்ற செய்தியை அவரது தாயார் லதா நம்மிடம் தெரிவித்துள்ளார். நாமும், நமது வாசகர்களுக்கு அதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்பான செய்திகள்:












Click it and Unblock the Notifications