பிரதமருக்கு மருத்துவ பரிசோதனை-இதயக் குழாயில் அடைப்பு?
பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான பல்கலைக்கழக மருத்துவமனையில் நேற்று முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். ஆஞ்சியோகிராபி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இருதயக் குழாய்களில் அடைப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் இன்று மாலை தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரதமருக்கு முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் நலமுடன் உள்ளார்.
இது வழக்கமான சோதனைதான். புதன்கிழமை மாலைக்கு மேல் சோதனை முடிவுகள் தெரிய வரும் என்றார்.
அதேசமயம், பிரதமரின் இதயக் குழாய்களில், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனையையொட்டி பிரதமரின் இன்றைய கொல்கத்தா பயணம் ரத்து செய்யப்பட்டது.