பாராமிலிட்டரி வீரர் வெறிச் செயல் - துப்பாக்கியால் சுட்டதில் 6 சக வீரர்கள் பலி
இம்பால்: மணி்ப்பூர் தலைநகர் இம்பால் அருகே, பாரா மிலிட்டரி வீரர் ஒருவர் தனது சக வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 6 பாரா மிலிட்டரி வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வீரர், ராமுவ முகாமை விட்டு தப்பி ஓடி விட்டார்.
புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீரரைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் ரைபிள்ஸ், பாராமிலிட்டரி படையைச் சேர்ந்தவர் அந்த வீரர். அவரது பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து அஸ்ஸாம் ரைபிள்ஸ் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஷாம்ஷர் ஜங் கூறுகையில், மூத்த அதிகாரி ஒருவருடன் அந்த வீரர் மோதலில் ஈடுபட்டார். பின்னர் அவரை தனது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
சத்தம் கேட்டதும் ஐந்து வீரர்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது அவர்களையும் அந்த வீரர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில் ஐந்து பேரும் உயிரிழந்தனர். பின்னர் அங்கிருந்து அந்த வீரர் தப்பி ஓடி விட்டார் என்றார்.
சம்பவம் நடந்த பாராமிலிட்டரி ராணுவ வீரர்கள் முகாம் இம்பாலிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் உள்ளது.
மணிப்பூரில் சக வீரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் கடந்த 3 ஆண்டுகளில் இது 6வது முறையாகும்.
மணிப்பூர், மியான்மர் எல்லைப் பகுதியில் நக்சலைட்டுகள் மற்றும் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இங்கு அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் களையெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.