சமாஜ்வாடியில் இணைந்தார் கல்யாண் சிங் மகன்
லக்னோ: பாஜகவிலிருந்து கல்யாண் சிங் விலகியுள்ள சூடு மாறாத நிலையில், அவரது மகன் ராஜ்வீர் சிங் சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். சமாஜ்வாடிக் கட்சிக்காக லோக்சபா தேர்தலில் கல்யாண் சிங் பிரசாரமும் செய்யவுள்ளாராம்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் நேற்று முன்தினம் அக்கட்சியிலிருந்து விலகினார்.
அத்வானி மீது சரமாரியாக புகார் கூறிய அவர், கட்சியில் தன்னை மதிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். அவரது மகன் ராஜ்வீர் சிங்குக்கு சமாஜ்வாடி கட்சியில் லோக்சபா சீட் தரப்படும் என்றும் பேச்சு எழுந்தது. கல்யாண் சிங்கும் கூட சமாஜ்வாடியில் இணையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் ராஜ்வீர் சிங் நேற்று சமாஜ்வாடிக் கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்த அறிவிப்பை சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் முன்னிலையில் கட்சியின் பொதுச் செயலாளர்கள் அமர்சிங்கும், ராம் கோபால் யாதவும், மாநில சமாஜ்வாடி தலைவர் சிவ் பால் சிங் யாதவும் வெளியிட்டனர்.
அதற்கு முன்பாக முலாயம் சிங் யாதவும், அமர்சிங்கும் கல்யாண் சிங்கை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துப் பேசினர்.
ராஜ்வீர் சிங் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் திபாய் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். அவரது தோல்விக்கு பாஜக எம்.பி. குர்ஜா அசோக் பிரதான்தான் காரணம் என கல்யாண் சிங் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் புலந்தசாகர் லோக்சபா தொகுதிக்கு பிரதானின் பெயரை பாஜக தலைமையிடம் அறிவித்ததால் கடுப்பாகித்தான் கல்யாண் சிங் கட்சியிலிருந்து விலக முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்யப் போவதாக கல்யாண் சிங் அறிவித்துள்ளார்.