இலங்கை: இந்திய அரசுக்கு மீண்டும் ஒரு கெடு-பாமக கோரிக்கை
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொண்டு அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்கு மீண்டும் ஒரு காலக்கெடுவை விதிக்கலாம் என பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு கட்சி நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
செயற்குழு உறுப்பினர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியின் மாநில மாநாடுக்கான ஏற்பாடுகள் குறித்தும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவிகள் அனைத்தும் தமிழர்களை அழிக்க பயன்படுவதால் அதை நிறுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய அரசின் மெத்தன போக்கால் இலங்கை ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. முல்லைத் தீவில் இருக்கும் 5 லட்சம் தமிழர்கள் உயிரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கிருகிறது. இல்லை என்றால் உலகிலேயே கொடூரமான மனிதப் படுகொலை முல்லைத் தீவு காட்டில் அரங்கேறும் ஆபத்து ஏற்பட்டுவிடும்.
தமிழர்களை முற்றிலுமாக அழித்துவிட்ட பிறகு அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளலாம் என தமிழக அரசு கருதுகிறதோ என எண்ணத் தோன்றுகிறது. போரை விரைவாக நிறுத்தி, அமைதி பேச்சுவார்த்தையை வலியுறுத்த இந்திய அரசு முன்வரவேண்டும்.
கவர்னர் உரையின் மீது நடைபெறும் விவாதத்திற்கு பதிலளிக்கும்போது, தமிழக முதல்வர் முன்பு விதித்ததைப் போன்று மீண்டும் ஒரு காலக்கெடுவை விதிக்க வேண்டும். அக்கெடு முடிவதற்குள் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வரப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது தமிழகத்தில் எத்தனை மது கடைகள் மூடப்பட்டுள்ளன என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்.
ஒகேனக்கல் திட்டத்தை மட்டும் விரைந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என சொல்வதை தவிர்த்துவிட்டு இனி அதற்கான வேலைகளில் தமிழக அரசு முழுமையாக செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.