கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியது துபாய் இந்திய பள்ளி
துபாய்: துபாய் மாடர்ன் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் இது பெற்றோர்களுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இயங்கி வரும் மாடர்ன் உயர்நிலை பள்ளியை குளோபல் எஜிகேசன் மேனேஜ்மன்ட் சிஸ்டம் என்ற அமைப்பு நிர்வாகித்து வருகிறது. இப்பள்ளியின் வளர்ச்சிக்காக தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டிருப்பதை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இதற்கு துபாய் அரசும் அனுமதி வழங்கிய நிலையில் இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இது கொடூரமானது. தற்போதைய சூழ்நிலையில் எனது குழந்தைக்கு நீச்சல் குளம் கொண்ட பள்ளியோ, பெரிய ஆராய்ச்சி கூடமோ தேவையில்லை என்றார் அவர்.
மற்றொருவர் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்டணம் 12 ஆயிரம் திர்ஹாமில் இருந்து 80 ஆயிரம் திர்ஹாமாக உயர்ந்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் புதிய கட்டிடம் கட்டியதற்கு நாங்கள் ஏன் பணம் தர வேண்டும் என்றார் அவர்.