ஊழியர்கள் எண்ணிக்கை - கணக்கெடுக்கும் சத்யம் எச்.ஆர்.
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் எத்தனை ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்ற சரியான விவரத்தை கணக்கிடும் பணியில் அந்த நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவு இறங்கியுள்ளது.
சத்யம் நிறுவனத்தில் மொத்தம் 53 ஆயிரம் ஊழியர்கள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில், 40 ஆயிரம் பேர்தான் உள்ளனர். மீதமுள்ள 13 ஆயிரம் பேரும் கற்பனை ஊழியர்கள். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 20 கோடி ஊதியமாக தரப்பட்டதாக ராமலிங்கராஜு கணக்கு காட்டி வந்துள்ளார் என்று ஆந்திர சிஐடி போலீஸார் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து உண்மையிலேயே எத்தனை பேர் பணியாற்றி வருகின்றனர் என்ற விவரத்தை அறியும் முயற்சியில் சத்யம் இறங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் எச்.ஆர். பிரிவு இதில் ஈடுபட்டுள்ளது.
ஊழியர்களின் விவரங்களை அறியும் முயற்சியில் எச்.ஆர். இறங்கியுள்ளதாக நிறுவன செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.
அவர் கூறுகையில், எத்தனை பேர் பணியாற்றுகின்றனர், அவர்களின் விவரங்கள் சோதனை செய்யப்படுகின்றன.
53 ஊழியர்கள் பணியாற்றுவதாகத்தான் நாங்கள் நம்புகிறோம். இருப்பினும் சிஐடி போலீஸாரின் கூற்றைத் தொடர்நது இதை உறுதி செய்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
சத்யம் நிறுவன கிளைகளில் பணியாற்றும் மேலாளர்கள் அனைவருக்கும் ஒரு சுற்றறிக்கையை எச்.ஆர். அனுப்பியுள்ளது. அதில், உங்களிடம் நேரடியாக ரிப்போர்ட் செய்யும் ஊழியர்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு கோரியுள்ளது.
மேலும் அலுவலக இமெயில் முகவரிகளை வைத்தும், நிறுவனத்திடம் உள்ள டேட்டா பேஸ் தகவல்களை வைத்தும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
சத்யம் நிறுவனத்திற்கு 66 நாடுகளில் கிளைகள் உள்ளன. மொத்தம் 185 வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.