கர்கரே உள்ளிட்ட 11 பேருக்கு அசோக் சக்ரா விருது
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகளுடன் மோதி வீர மரணம் அடைந்த மகாராஷ்டிர தீவிரவாத ஒழிப்புப் படை தலைவர் ஹேமந்த் கர்கரே, சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் கோபால் ஓம்ப்ளே மற்றும் கமாண்டோ வீரர் சந்தீப் உண்ணி கிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேருக்கு இந்த ஆண்டுக்கான அசோக் சக்ரா விருது வழங்கப்படுகிறது.
ஆண்டு தோறும் மரணத்திற்குப் பின்னர் வழங்கப்படும் மத்திய அரசின் வீர விருது அசோக் சக்ரா. இந்த ஆண்டுக்கான விருது 11 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கியுள்ளார்.
குடியரசு தினத்தின்போது இந்த விருதுகள் அளிக்கப்படும்.
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் முயற்சியின்போது வீர மரணத்தைத் தழுவிய ஹேமந்த் கர்கரே, காவல்துறை அதிகாரிகள் அசோக் காம்தே, விஜய் சலேஸ்கர், துக்காராம் ஓம்ப்ளே, கமாண்டோ வீரர்கள் கஜேந்திர சிங் பிஷ்ட், சந்தீப் உண்ணிகிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளன.
டெல்லி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எம்.சி சர்மா (இவர் டெல்லியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் உயிர் நீத்தவர்), ராணுவ அதிகாரி கர்னல் ஜோஜின் தாமஸ், ஒரிசா காவல்துறை அதிகாரி சத்பதி, ஹவில்தார் பகதூர் சிங் வோரா, மேகாலயா காவல் அதிகாரி டியங்டோ ஆகியோரது பெயர்களும் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவின்போது அசோக் சக்ரா விருதுகள் வழங்கப்படும்.