தா.பாண்டியன் மீது ஜெ. கோபம் - சந்திப்பை ரத்து செய்தார்
சென்னை: விடுதலைப் புலிகள், தமிழர்களை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை மறுத்துப் பேசியதால் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் மீது ஜெயலலிதா கோபத்துடன் இருக்கிறார். இதனால், சந்திக்க நேரம் தா.பாண்டியனை சந்திக்க அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான அணியில் இடதுசாரிகள் இடம் பெற்றுள்ளன. அதேசமயம், தேசிய அளவில் இடதுசாரிகள் பல்வேறு கட்சிகளை இணைத்து பிரமாண்ட கூட்டணியை அமைத்து வருகின்றன.
இந்த அணியில், தெலுங்கு தேசம், தெலுங்கான ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளி்ட்ட பலம் வாய்ந்த பிராந்திய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அதிமுகவையும் தேசிய அளவிலான இந்த 3வது அணியில் இணைக்க இடதுசாரிகள் முயன்று வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து தோழமைக் கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க உள்ளதாகக் கூறினார்.
மேலும் ஓரிரு நாளில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து திங்கள்கிழமை அவர் ஜெயலலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்று சந்திப்பு நடைபெறவில்லை.
இந்த சந்திப்பை ஜெயலலிதா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்ற ஜெயலலிதாவின் கருத்துக்கு தா. பாண்டியன் மறுப்பு தெரிவித்திருந்தார். ஜெயலலிதாவை சந்தித்து உண்மை நிலவரத்தை விளக்குவேன் எனவும் கூறினார்.
இதனால் தா.பாண்டியன் மீது ஜெயலலிதா கோபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் தா.பாண்டியனை சந்திக்க அவர் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.
இருப்பினும் விரைவி்ல் அவர் ஜெயலலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அவருடன் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் இருந்தனர்.
இது பொதுவான சந்திப்பு, தேசிய, மாநில அளவிலான அரசியல் நிலை குறித்து விவாதித்தோம் என்று கூறினார் வரதராஜன்.
இருப்பினும் மக்களவைத் தேர்தலி்ல தமிழக்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்தும் முக்கியமாக இரு தலைவர்களும் விவாதித்ததாக தெரிகிறது.