பிரபாகரன் தப்பி ஓடவில்லை - வன்னியில்தான் இருக்கிறார்: கருணா
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தப்பி ஓடவில்லை. அவர் தப்பி ஓடவும் மாட்டார். வன்னி காட்டுக்குள்தான் அவர் இருப்பார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும், அரசு ஆதரவில் எம்.பியானவருமான கருணா கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று கொழும்பில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த நெருக்கடியான நேரத்தில் பிரபாகரன் இலங்கையை விட்டு தப்பி ஓட முடியாது. அவர் தப்பவும் மாட்டார்.
மலேசியாவுக்கு அவர் தப்பியிருக்கலாம் என்று கூறுவதை நான் நம்பவில்லை. அவர் இந்தியாவுக்கும் தப்பிப் போக முடியாது. அவர் தப்பி வந்தால் உடனடியாக இந்திய அரசு அவரைக் கைது செய்து விடும்.
இலங்கைப் படைகளும் பிரபாகரன் தப்பி ஓடி விட முடியாதபடி தீவிர கண்காணிப்பில் உள்ளன. எனவே அவர் தப்பி ஓட மாட்டார். வன்னி காட்டுக்குள்தான் அவர் பதுங்கியிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.
முன்பும் கூட இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்பட்டபோது அவர் காட்டுக்குள் சென்று பதுங்கியுள்ளார். பின்னர் கொரில்லா தாக்குதல்களின் மூலம் அனைத்துப் போராளிகளையும் ஒருங்கிணைத்தார்.
ஆனால் தற்போது அவ்வாறு செய்ய முடியாத நிலையில் புலிகள் உள்ளனர். அவர்களிடம் முன்பிருந்த வீரமிக்க வீரர்கள் இப்போது உயிருடன் இல்லை அல்லது படையினரிடம் பிடிபட்டு விட்டனர்.
பிரபாகரனை ஒடுக்கினால்தான் தமிழர்களின் உரிமைகளைக் காக்க முடியும். தற்போது 90 சதவீத தமிழரர்கள் பிரபாகரன் பிடிபட வேண்டும் என்ற கருத்தில் உள்ளனர்.
கிழக்கில் உள்ள அனைத்து சிறார் போராளிகளும் இன்னும் 3 மாதங்களில் மறுவாழ்வு பெறுவார்கள். இவர்களில் எங்களது அமைப்பைச் சேர்ந்த சிறார்களும் உள்ளனர். இதுதொடர்பாக எனது கட்சி, இலங்கை அரசு மற்றும் யுனிசெப் அமைப்புக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி 3 மாதங்களுக்குள் அனைத்து சிறார் போராளிகளும் மறுவாழ்வுக்கு உட்படுத்தப்படுவர். அவர்களுக்கான நலத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் உள்ள சிறார் நல அலுவலகத்தில் எங்களது அமைப்பைச் சேர்ந்த 14 சிறார் போராளிகளை ஒப்படைத்துள்ளோம். இன்னும் 2 வாரங்களில் மேலும் 20 சிறார்களை ஒப்படைக்கவுள்ளோம்.
தற்போது எங்களது பிரதிநிதிகளுக்கு அரசே போதிய பாதுகாப்பு அளிக்கிறது. எனவே எங்களது பாதுகாப்புப் படையை நாங்கள் கலைத்து விட்டோம். முன்பு எங்களது பாதுகாப்புக்காக சிறிய படையை வைத்திருந்தோம். தற்போது அதுவும் இல்லை என்றார் கருணா.