வெளிநாட்டினரை தூக்குங்கள் - மைக்ரோசாப்ட்டுக்கு குடியரசு கட்சி மிரட்டல்
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆட்குறைப்பு செய்தால் அமெரிக்க ஊழியர்களை விட்டுவிட்டு வெளிநாட்டு ஊழியர்களை முதலில் நீக்க வேண்டும் என குடியரசு கட்சி செனட் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் 60 ஆயிரம் ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. இதில் அதிகம் பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் வேலைக்கு அமர்த்தியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்நிறுவனம் சமீபத்தில் அடுத்த 18 மாதங்களுக்குள் 5,000 ஊழியர்களை நீக்கப் போவதாக அறிவித்தது.
இதையடுத்து அயோவா மாகாணத்தை சேர்ந்த சக் கிராஸ்லி என்ற குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி ஸ்டீவ் பால்மருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆட்குறைப்பு செய்தால் அமெரிக்க ஊழியர்களை விட்டுவிட்டு மற்றவர்களைத்தான் நீக்க வேண்டும்.
முக்கியமாக, ஹெச்1பி விசா வைத்திருக்கும் வெளிநாட்டினரின் வேலையை முதலில் பறிக்க வேண்டும். பொருளாதாரம் மந்தமான நிலையில் அமெரிக்கர்களை நீக்க கூடாது.
அதேபோல, புதிதாக ஆள் எடுக்க நினைத்தால் அமெரிக்கர்களுக்கு தான் முதலில் முன்னுரிமை அளி்க்க வேண்டும் என கடிதத்தில் எழுதியுள்ளார்.
குடியரசுக் கட்சி செனட்டரின் இந்த வேண்டுகோளை மைக்ரோசாப்ட் ஏற்குமா என்பது தெரியவில்லை.