28 லாரிகளுக்கு தீ வைத்து நக்சலைட்கள் வெறியாட்டம்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த 28 லாரிகளை நக்சலைட்கள் தீயிட்டு கொளுத்தினர்.
தாண்டிவடா மாவட்டத்தை சேர்ந்த கிரந்துல் என்ற ஊரில் கே.ஏ.பப்பசந்த் கான்ட்ராக்ட் கம்பெனி உள்ளது.
நேற்று 400க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய நக்சலைட்கள் இவரது கம்பெனிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களின் மொபைல் போன்களை பறித்து, வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
தாண்டிவடா எஸ்.பி. ராகுல் சர்மா கூறுகையில், நக்சலைட்டுகள் கான்ட்ராக்டரின் உறவினர்களை முதலில் மிரட்டியுள்ளனர். அதை தொடர்ந்து ஊழியர்களையும் மிரட்டி இருக்கின்றனர். பின்னர் அங்கிருந்த 24 வாகனங்களை தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர்.
அருகிலிருந்த எரிபொருள் கிடங்கு ஒன்றுக்கும் நெருப்பு வைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அதில் எரிபொருள் எதுவும் இல்லாததால் தப்பித்தது.
நக்சலைட்களின் ஒரு பிரிவினர் அங்கிருந்தவர்களின் மொபைல் போனை பறித்துள்ளனர். மற்றொரு பிரிவினர் நாச வேலையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மொபைல் போன்களை உரியவர்களிடம் கொடுத்துள்ளனர் என்றார் எஸ்.பி.
இதேபோல் காங்கர் மாவட்டத்தில் 30 பேர் கொண்ட இடதுசாரி நக்சலைட்கள் கும்பல் ஒன்று அங்கே ரோடு போடும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வாகனங்களை தீவைத்து கொளுத்தினர்.