கொழும்பு புறப்பட்டுச் சென்றார் பிரணாப் முகர்ஜி
முல்லைத்தீவை விடுதலைப் புலிகளிடமிருந்து 2 நாட்களுக்கு முன்பு ராணுவம் கைப்பற்றியது. ஆனால் தொடர்ந்து அப்பாவித் தமிழர்களை அது குறி வைத்துக் கொன்று குவித்து வருகிறது.
நேற்று நடந்த பயங்கரத் தாக்குதலில் 300 தமிழர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் 2 நாள் பயணமாக பிரணாப் முகர்ஜி இன்று கொழும்பு சென்றார். பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வைக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியும், தமிழக தலைவர்களும் தொடர்ந்து கோரி வந்தனர்.
இதுதொடர்பாக இருமுறை சட்டசபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
சமீபத்தில் இறுதி வேண்டுகோள் என்ற பெயரில் மத்திய அரசுக்கு கிட்டத்தட்ட எச்சரிக்கை விடுக்கும் வகையில் தீர்மானமும் நிறைவற்றப்பட்டது. ஆனால் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் அப்பாவித் தமிழர்கள் 300 பேர் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியின் பின்னணியில், பிரணாப் கொழும்பு சென்றுள்ளார்.
இன்று மாலை பிரணாப் முகர்ஜி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.
புலிகளுக்கு கருணை கிடையாது
முன்னதாக இன்று பிற்பகல் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதில், தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. எந்த ரூபத்தில் இருந்தாலும் தீவிரவாதம், தீவிரவாதம்தான். எனவே, தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் எந்த அமைப்பின் மீதும் இந்தியா அனுதாபம் காட்ட முடியாது.
குறிப்பாக, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். அதே சமயத்தில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்துவோம். அவர்கள் பலியாவதை தடுப்போம்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களுடன் நான் ஆலோசிக்கவுள்ளேன்.
இலங்கையைப் பாதித்துள்ள பிரச்சினைகளுக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்பதில் இந்தியா திடமான நம்பிக்கை கொண்டுள்ளது.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டசபையில் சில காலத்திற்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவும் பிரதமரை சந்தித்துப் பேசியது.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் சிக்கி இன்னலுற்று வரும் தமிழர்களின் அவல நிலைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில், வெளியுறவு அமைச்சரை இலங்கைக்கு அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும் என பிரதமர் உறுதியளித்திருந்தார்.
பலமுறை பேசினேன் ..
இதையடுத்து நானும், இலங்கை வெளியுறவு அமைச்சருடன் பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இலங்கை நிலவரம் குறித்து விவாதித்தேன்.
வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனனும் கொழும்புக்குச் சென்று விவாதம் நடத்தினார். இதையடுத்து கூடுதல் விவாதத்திற்காக நான் செல்ல முடிவானது.
இனப் பிரச்சினைக்கும், நீடித்த அமைதிக்கும் சுமூகப் பேச்சுவார்த்தையே சிறந்தது எனவும், அதிகாரப்பகிர்வுத் திட்டத்தை விரைவில் அமல்படுத்துமாறும் ராஜபக்சேவிடம் வலியுறுத்த இருக்கிறேன் என்றார் பிரணாப் முகர்ஜி.