சட்டசபையிலிருந்து அதிமுக, மதிமுக வெளிநடப்பு

தமிழக சட்டசபையில் இன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரண்டாவது நாளாக விவாதம் மேற் கொள்ளப்பட்டது.
அப்போது கலசப்பாக்கம் அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இலங்கை தமிழர் நிவாரணத்திற்காக திரட்டப்பட்ட நிதியும் சரியாக கையாளப்படவில்லை என்றார்.
அதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, எவ்வளவு நிதி வசூல் செய்யப்பட்டது. அது எப்படி செலவிடப்பட்டது என அனைத்து விவரங்களும் பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்தன. அதை படித்து விட்டு பேச வேண்டும்.
நிதி வசூலிப்பது என்பது அரசின் தனிப்பட்ட சொத்து அல்ல, காசோலைகள் மூலமாகத்தான் நிதி வசூல் செய்யப்பட்டது. பணமாக வாங்கவில்லை. அவை தலைமைச் செயலாளர் மூலம் கணக்கு வைக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் அவரிடம் இருந்து இந்த கணக்குகளை பெற்றுக் நீங்கள் கொள்ளலாம்.
இந்த நிதியை முதல்வரின் குடும்பத்தார் பங்கு போட்டுக் கொண்டதாக பொறுப்பில்லாமல் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஒருவர் அறிக்கை விடுகிறார். அவரது உறுப்பினர்களும் அப்படி தான் இருக்கின்றனர் என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் அமைச்சரின் வார்த்தைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றனர்.
எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, எதிர்க்கட்சி தலைவர் வெளியிட்ட அறிக்கை பொறுப்பற்ற செயல் என்று மின்துறை அமைச்சர் கூறியதை திரும்ப பெற வேண்டும் என்றார்.
அதற்கு பதில் அளித்த அன்பழகன், வெளியில் இருந்து அறிக்கை விட்டாலும் அதுபற்றி சட்டசபையில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. பொறுப்பற்ற முறையில் விடும் அறிக்கைகளை இங்கு மறுத்துக் கூறலாம் என்றார்.
இதையடுத்து தொடர்ந்து கூச்சல், குழுப்பம் நிலவியது. அமைச்சர் தெரிவித்த கருத்தை வாபஸ் வாங்க வேண்டுமென்று அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.
அப்போது குறுக்கிட்ட ஆற்காடு வீராசாமி, முதல்வரின் குடும்பத்தார் நிதியை சுருட்டிக் கொண்டதாக முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதால்தான் அதற்கு நான் பதில் சொல்ல நேர்ந்தது. இதனை நீதிமன்றத்திலும் சந்திக்க தயார் என்றார்.
இதனையடுத்து அதிமுக மற்றும் மதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications