டாஸ்மாக் கடைகளில் தேசியக் கொடி ஏற்ற முயற்சி - போலீஸார் தடுத்தனர்
சென்னை: டாஸ்மாக் கடைகளில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடியை ஏற்ற முயன்ற ஊழியர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
பணிநிரந்தரம், வார விடுமுறை, 8 மணி நேர வேலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட தேசிய பொது விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று, விடுப்பு எடுப்பது என்றும், டாஸ்மாக் கடைகள் முன்பு தேசியக்கொடி ஏற்றப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு, மாநில தலைவர் பி.எஸ். சவுந்திரபாண்டியன் தலைமையிலான பணியாளர்கள் தேசிய கொடியை ஏற்ற முயன்றனர்.
அப்போது, அங்கு வந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கொடியை மதுக் கடைக்கு முன்பாக ஏற்றக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், டாஸ்மாக் மதுக்கடையால் அரசுக்கு ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அப்படி இருக்க நீங்கள் எப்படி தேசிய கொடியை ஏற்றவிடாமல் தடுக்கலாம் என்று போலீஸாரிடம் சவுந்தரபாண்டியன் வாதிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களும் கூட்டமாக கூடினர். அவர்கள், மதுக் கடைக்கு முன்பு கொடியேற்றக் கூடாது. வேண்டுமானால் அருகில் கொடியேற்றுங்கள் என்று ஊழியர்களுக்கு எடுத்துக் கூறினர். இதை ஏற்ற ஊழியர்கள் மதுக் கடைக்கு அருகில் கொடியேற்றினர்.
நேற்று திட்டமிட்டபடி மாநிலத்தின் பல பகுதிகளில் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதாகவும் சவுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.