பிலிப்பைன்ஸ்: 3 லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கிறார்கள்!
உலகமெங்கும் வேலை இழப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த வாரம் திங்கள்கிழமை மட்டும் 80ஆயிரத்துக்கும் அதிகமான வேலை இழப்புகளை அறிவித்துள்ளன அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி நாடுகள்.
இப்போது அடுத்த குண்டை வீசியுள்ளது பிலிப்பைன்ஸ் அரசு. தங்கள் நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமான கட்டத்துக்குச் சென்றுள்ளதால், அடுத்த ஆறுமாதங்களில் 3 லட்சம் பேர் பணியிழக்கும் அபாயம் உள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் மற்றும் ஆசிய நாட்டவர் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நிதித்துறைச் செயலாளர் மரியானிடோ ரோக் தெரிவித்துள்ளதாவது:
பிலிப்பைன்ஸ் முழுவதும் 37 மில்லியன் மக்கள் பல்வேறு வேலைகளில் உள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு 6.8 சதவிகிதம் ஆகும். இந்த கணக்குகள் இன்னும் சில தினங்களில் வேகமாக மாறிவிடும் சூழல் உள்ளது.
10 சதவிகிதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளது. இதனைக் குறைக்கும் நிலையில் பொருளாதாரம் இல்லை. வேலை நீக்கத்தை கடைசி ஆயுதமாகப் பயன்படுத்துமாறு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது அரசு.
மணிலாவைச் சுற்றியுள்ள நிறுவனங்களில் இந்த மாதம் 10000 பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். கடந்த மாதம் 15 பேரை நீக்கியுள்ளனர். மேலும் 19 ஆயிரம் பேருக்கு வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என மாற்றப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸில் 27 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 1 டாலர் அல்லது அதற்கும் குறைவான அளவுதான் சம்பாதிக்கின்றனர். இப்போது பொருளாதார, நிதி நெருக்கடி சூழ்ந்துள்ளதால் அதற்கும் ஆபத்து வந்துவிட்டது என்றார் அவர்.
பெருகும் வேலையின்மையைக் கட்டுப்படுத்த, தங்கள் நாட்டுத் தொழிலாளர்களில் கணிசமானோரை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பவும் முடிவுசெய்துள்ளதாம் பிலிப்பைன்ஸ். குவைத் மற்றும் கட்டாரில் 119000 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த வேலைகளுக்கு தங்கள் நாட்டுத் தொழிலாளர்களை அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் ஓவர்ஸீஸ் மேன்பவர் நிறுவனத் தலைவர் ஜெனிபர் மணாலிலி அறிவித்துள்ளார்.