சட்ட மாணவர்கள் மருத்துவமனையில்; அங்கும் தொடரும் உண்ணாவிரதம்!
செங்கல்பட்டு: இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி செங்கல்பட்டியில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர்களை போலீஸார் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் குளுக்கோஸ் போன்றவற்றை ஏற்க மறுத்து மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இலங்கை போர் நிறுத்தத்தை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை கடந்த 22ம் தேதி துவங்கினார்கள். இதில் 6 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மீதமுள்ள 8 மாணவர்கள் இன்று 7-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். அவர்களின் நாடித்துடிப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பது அவசியம் என தெரிவித்தனர்.
இதையடுத்து உணணாவிரத இடத்துக்கு சென்ற போலீசார் 8 மாணவர்களையும் அலேக்காக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது சில மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு, ஆஸ்பத்திரியில் குளுகோஸ் ஏற்றினார்கள். சிறிது நேரத்தில் மாணவர்கள் சுய நினைவுக்கு வந்ததும், குளுகோஸ் குழாய்களை பிடுங்கி எறிந்து விட்டனர். சிகிச்சையை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர்.
மருத்துவமனையில் தொடர்ந்து உண்ணாவிரதத்தை கடைபிடித்து வருகிறார்கள்.