எச்ஐவி பாதித்த ஊழியர்களை நீக்கிய கல்லூரி

திண்டுக்கல்லில் உள்ள அந்த பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் 38 வயதாகும் அப்பெண். இவரது கணவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் வந்து பலியானார். கணவர் மூலம் இப்பெண்ணையும் எச்ஐவி தாக்கியது.
இந்த நிலையில்தான் பிழைப்புக்காக கல்லூரி விடுதியில், சமையலராக பணியில் சேர்ந்தார் அப்பெண்.
சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு கல்லூரி நிர்வாகம் எச்ஐவி சோதனையை நடத்தியது. அப்போது இப்பெண்ணுக்கு எச்ஐவி இருப்பது தெரிய வந்தது. இவர் தவிர மேலும் 3 ஊழியர்களுக்கும் எச்ஐவி இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து நான்கு பேரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கி விட்டது கல்லூரி நிர்வாகம்.
இதுகுறித்து பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண் கூறுகையில், 3 வருடங்களாக இங்கு வேலை பார்த்து வருகிறேன். பொங்கல் முடிந்து கல்லூரி திறந்து பிறகு இங்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அப்போது எனக்கு எச்ஐவி இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து என்னை வேலையை விட்டு நீக்கி விட்டதாக வார்டன் கூறினார் என்றார்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் இதை மறுத்துள்ளது. நான்கு பேரும் அவர்களாகத்தான் வேலையை விட்டு நின்று விட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறுகிறது.
திண்டுக்கல்லில் நிலைமை இப்படி இருக்கிறது. ஆனால், தேனி மாவட்டத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்துக்கு எச்.வி.ஐ. பாதித்த பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் விவகாரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செயலாளர் சுப்புராஜ் கூறுகையில், கல்லூரி நிர்வாகம் நான்கு பேரையும் டிஸ்மிஸ் செய்திருந்தால் அது தவறாகும். இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எச்ஐவி பாதித்தவர்களுக்கு வேலை தர மறுக்கக் கூடாது என சட்டம் தெளிவாகச் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் நிலைமை தலைகீழாகவே உள்ளது. அதிலும் பொறியியல் கல்லூரி நிர்வாகமே இப்படி நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது.












Click it and Unblock the Notifications