கருணாநிதி சொன்னால்தான் புலிகள் கேட்பார்கள் - அவரே வன்னி போகட்டும்: ஜெ.
சென்னை: நான் ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததில்லை. கருணாநிதி சொன்னால்தான் புலிகள் கேட்பார்கள். எனவே அவர்தான் வன்னிக்குப் போக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் வன்னிக்கு வர வேண்டும். இங்குள்ள நிலைமையைப் பார்க்க வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கொழும்பு சென்று வந்த பிரணாப் முகர்ஜியிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜபக்சேவின் கோரிக்கையை இரு தலைவர்களும் ஏற்க வேண்டும் என இலங்கை தமிழ் எம்.பி. அனந்த சங்கரி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில், ஜெயலலிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு ராஜபக்சே விடுத்த அழைப்புக்கு நன்றி. நான் போவதால் எந்த நன்மையும் ஏற்படாது. விடுதலைப்புலிகள் நான் சொல்வதை கேட்க மாட்டார்கள்.
விடுதலைப் புலிகளை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை.
இலங்கையில் அமைதியும், போர் நிறுத்தமும் ஏற்பட வேண்டும் என்பதே இப்போது முக்கியமானதாகும்.
கருணாநிதி இலங்கை போக வேண்டும். அவர் சொன்னால் விடுதலைப் புலிகள் கேட்பார்கள். ஆகவே அவரை அழைத்துச் சென்று விடுதலைப்புலிகளை ஆயுதத்தை ஒப்படைக்கும்படி கூறலாம். எனவே அவர் செல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்றார் ஜெயலலிதா.