தா.பாண்டியனுடன் ராமதாஸ் அவசர ஆலோசனை - இன்று முக்கிய முடிவு அறிவிப்பு
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உலகத் தமிழர்களின் ஒருமித்த முடிவாக, இன்று முக்கிய முடிவு அறிவிக்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இலங்கையில் நிலைமை மேலும் மோசமாகி வரும் பின்னணியில் நேற்று டாக்டர் ராமதாஸை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தி.நகர் பொங்கு தமிழ் அறக்கட்டளை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சிபிஐ முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, மாநில துணை செயலாளர் மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சோழன் நம்பியார் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தாங்க முடியாத துக்க செய்தியாக உள்ளது. நேற்றும் இன்றும் வரும் செய்திகளை பொறுமையாக கேட்கமுடியவில்லை.
அதனால் ஏதாவது செய்ய வேண்டும், அமைதியாக இருக்க முடியாது என்பதால் ஒத்த கருத்துள்ள தலைவர்களை சந்தித்து என்ன செய்யலாம்? என டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசித்தேன். அவரும் ஆழ்ந்த வேதனையில்தான் இருக்கிறார்.
ஒத்த கருத்துடைய தலைவர்களின் கூட்டம் புதன்கிழ மை சென்னையில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு ஆறரை கோடி தமிழ் மக்களின் ஒருமித்த முடிவாக இருக்கும் என்றார்.