ஏப்ரல் 8 - மே 15க்குள் லோக்சபா தேர்தல் நடக்கலாம்: தேர்தல் ஆணையர்
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய தேர்தல் கமிஷனர் குரேஷி லண்டனில் உள்ள இந்தியா ஹவுசில் நேற்று மாலை காஷ்மீர் சட்டசபை தேர்தல் குறித்து உரை நிகழ்த்தினார்.
அவருடன் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் சிவ சங்கர முகர்ஜியும் கலந்து கொண்டார். அப்போது குரேஷி கூறுகையில், லோக்சபா தேர்தல் குறித்த தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 15 வரையிலான காலகட்டத்தில் தேர்தல் நடைபெறும்.
காஷ்மீரில் மோசமான வானிலையையும் தாண்டி 61.5 சதவீதம் ஓட்டுப்பதிவானது தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்தது. இந்திய தேர்தல் ஆணையம், உயர்ந்தபட்ச நம்பக்கத்தன்மை கொண்டதாகும்.
இந்திய தேர்தல் ஆணையம்தான் உலகிலேயே அதிக அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துகிறது. இந்தியாவில் சுமார் 67.1 கோடி வாக்காளர்கள் மின்னணு இயந்திரம் மூலம் வாக்களிக்கின்றனர்.
இந்தியாவில் ஆளுங்கட்சியினருக்கு எங்களை பிடிக்காது. ஆனால் எதிர்கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கும். அதே எதிர்கட்சி ஆளுங்கட்சியாக மாறியவுடன் எங்களை பிடிக்காமல் போய்விடும் என்றார் குரேஷி.