ஐஸ்வர்யாவை இழுக்கிறது சமாஜ்வாடி - மாதேபுராவில் போட்டி?
பாட்னா: முன்னாள் உலக அழகியும், அமிதாப் பச்சன் மருமகளுமான நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனை பீகார் மாநிலத்தின் மாதேபுரா தொகுதியில் வேட்பாளராக நிறுத்த சமாஜ்வாடி கட்சி முயற்சித்து வருகிறது.பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8 முதல் மே 15ம் தேதிக்குள் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து தேர்தல் ஜூரம் அனைத்து கட்சிகளையும் தொற்றி கொண்டுள்ளது. சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்க துவங்கியுள்ளன.
இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி, தனது ஸ்டார் பவரை காட்ட படு மும்முரமாக காய் நகர்த்தி வருகிறது. லக்னோ தொகுதியில் சஞ்சய் தத் அல்லது அவரது மனைவி மான்யதாவை நிறுத்த அது முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் மாதேபுரா தொகுதியில் ஐஸ்வர்யா ராயை, போட்டியிட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
தற்போது பீகார் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சிக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஐஸ்வர்யாவை வைத்து ஓட்டை அள்ள அது திட்டமிட்டுள்ளது.
ஐஸ்வர்யா போட்டியிட வேண்டும் என்று அங்குள்ள அடிமட்டத் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனராம்.
இதுகுறித்து அக்கட்சியின் பீகார் மாநில பாராளுமன்ற தேர்தல் குழு தலைவர் துள்சி சிங் கூறுகையில்,
ஐஸ்வர்யா மிகவும் பிரபலமான நடிகை. அவரை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கமான குடும்பத்தை சேர்ந்தவர்.
மாதேபுரா தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றார்.
சர்ச்சைக்குரிய ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி பப்பு யாதவின் தொகுதியான இதில் ஐஸ்வர்யா போட்டியிட்டால் 2.5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம் என அம்மாவட்ட சமாஜ்வாடி கட்சி தலைவர் அங்கத் யாதவ், கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஐஸ்வர்யா பச்சனை வேட்பாளராக்கினால் லாலு பிரசாத் மற்றும் சரத் யாதவ் கட்சிகளை எளிதாக தோற்கடிக்கலாம் என எழுதியுள்ளார்.