லோக்சபா தேர்தலுக்கு தேசிய அளவில் கூட்டணி இல்லை: காங்.
டெல்லி: லோக் சபா தேர்தலுக்கு தேசிய அளவிலான கூட்டணியை அமைப்பதில்லை என காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. இதன் மூலம் சில கட்சிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சீட் கேட்பதைத் தவிர்க்கலாம் என காங்கிரஸ் கணக்குப் போட்டுள்ளது.
டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது.
லோக்சபா தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தி்ல் ஆலோசிக்கப்பட்டது.
காலை பத்தரை மணிக்கு சோனியா காந்தியின் வீட்டில் இந்தக் கூட்டம் தொடங்கியது.
பிரதமர் மன்மோகன் சிங் இல்லாமல் சமீப காலத்தில் நடந்த முதல் காரியக் கமிட்டிக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ், பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் திவிவேதி கூறுகையில், தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது. மாநில அளவில்தான் கூட்டணியும், இட ஒதுக்கீடும் இருக்கும். இப்போதும் அப்படித்தான் உள்ளது.
கூட்டணி என்பதே எண் விளையாட்டுதான். யாருக்கு அதிகம் வெற்றி கிடைக்கிறது என்பதுதான் இதில் முக்கியமானது. தேர்தலுக்குப் பின்னர்தான் அது தெரியும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைத்தால் அப்போதுள்ள நிலைமையே வேறாக இருக்கும்.
தேசிய அளவில் கூட்டணி இல்லை என்பதால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கலைக்கப்படுகிறது என்று அர்த்தம் இல்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அப்படியேதான் உள்ளது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலை நாங்கள் சந்திக்க மாட்டோம்.
அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளாகத்தான் தேர்தலை சந்திப்போம்.
மாநிலத்திற்கு மாநிலம் சீட் ஒதுக்கீடு வித்தியாசப்படும். மாநில காங்கிரஸ் தலைவர்கள், அங்குள்ள நிலைமைக்கேற்ப, கட்சி மேலிடத்தின் ஒப்புதலோடு தொகுதிப் பங்கீட்டை மேற்கொள்வார்கள்.
கூட்டணி இல்லாத இடங்களில் காங்கிரஸ் சுயமாகவே வாக்கு சேகரிக்கும். கூட்டணி வைத்துள்ள இடங்களில், கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவாக காங்கிரஸ் வாக்கு சேகரிக்கும் என்றார் அவர்.
தேசிய கூட்டணியாக தேர்தலை சந்திப்பதில்லை என்ற காங்கிரஸின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
காரணம் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, சமாஜ்வாடிக் கட்சி ஆகியவை தங்களது ஆதிக்கம் உள்ள மாநிலங்களைத் தாண்டி பிற மாநிலங்களிலும் சீட் கேட்க திட்டமிட்டுள்ளதால், அதை முறியடிக்கவே இப்படி ஒரு உத்தியை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications