சென்னையில் கருணாநிதி தலைமையில் பிப். 3ம் தேதி திமுக செயற்குழு கூட்டம்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி தராவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், அவர்களை காக்க விரைவில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இப்பிரச்னையில் இதுவரை எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. இதையடுத்து பிப்ரவரி 15ம் தேதிக்குள் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
செயற்குழுவில் இலங்கை பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கும். அப்போது இலங்கை தமிழர் படுகொலை குறித்து விவாதிக்கப்படும்.
இதில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications