மேய்டாஸ் இயக்குநர் சந்தர் ஷீல் பன்சால் ராஜினாமா
ஹைதராபாத்: சர்ச்சைக்குரிய சத்யம் நிறுவனம் 'காலியாக' பிள்ளையார் சுழி போட்ட மேய்டாஸ் இன்பிரா நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் சந்தர் ஷீல் பன்சால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து அவசரம் அவசரமாக நரசிம்ம ராவ் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேய்டாஸ் நிறுவனத்தில் மொத்தம் மூன்று இயக்குநர்கள். தேஜா ராஜு மற்றும் ஆர்.பி. ராஜு ஆகியோர் இருந்தனர். மூன்றாவது நபராக இருந்தவர்தான் பன்சால்.
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென ராஜினாமா செய்து விட்டார். கம்பெனிகள் சட்டப்படி, குறைந்தது மூன்று இயக்குநர்களாவது, இயக்குநர் குழுவில் இருக்க வேண்டும். இதனால் சிக்கலில் மாட்டிக் கொண்ட மேய்டாஸ் நிறுவனம் அவசரமாக தனது போர்டு கூட்டத்தைக் கூட்டியது.
அதில் கூடுதல் இயக்குநராக நரசிம்மராவ் நியமிக்கப்பட்டார். இயக்குநர் பதவியிலிருந்து விலகி விட்ட பன்சால், நிறுவனத்தின் போக்குவரத்து, எண்ணை மற்றும எரிவாயுப் பிரிவின் தலைவராக செயல்படுவார் என தேஜா ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சத்யம் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு தனது மோசடியை பட்டவர்த்தனமாக தெரிவித்த நாள் முதல் இந்த தேஜா ராஜு அலுவலகம் பக்கமே வராமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆர்.பி. ராஜு ஒரு டாக்டர் ஆவார். இவருக்கு நிறுவனத்தை நடத்தக் கூடிய அளவுக்கு திறமை கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.