சத்யம் நிறுவனத்திற்காக புதிதாக ரூ. 2000 கோடி ஆர்டர்கள்
டெல்லி: ஊழல், மோசடி, நீதிமன்ற விவகாரங்களில் சிக்கித் திணறும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு, அரசுத் துறையைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து 40 கோடி டாலர் மதிப்பிற்கு (சுமார் ரூ.1,960 கோடி) ஆர்டர்கள் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஏற்கனவே உள்ள வாடிக்கை நிறுவனங்களும் தொடர்ந்து ஆர்டர்கள் வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சில வாடிக்கை நிறுவனங்கள் ஆர்டர்களின் அளவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் என்ற வாடிக்கை நிறுவனம், சத்யம் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், சத்யம் நிறுவனத்தால் வழங்கப்படும் சேவையால் பம்பார்டியர் நிறுவனம் திருப்தி அடைந்துள்ளது. எனவே, சத்யம் நிறுவனத்துடன் கொண்டுள்ள தொடர்பு தொடர்ந்து நீடிக்கும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்த நிலை நீடிக்குமா என்று தெரியவில்லை. காரணம், சத்யம் நிறுவனத்தின் நான்கு மிகப் பெரிய வாடிக்கை நிறுவனங்களான சிட்டி குரூப், மெரில்லிஞ்ச், நோவார்டிஸ் மற்றும் ஜி.எஸ்.கே. ஆகியவை வேறு நிறுவனங்களுக்கு மாறுவதற்காக பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
சத்யம் நிறுவனத்தில் நிலவி வரும் குழப்பம் தொடர்ந்து நீடிக்குமானால், இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்திற்கு முழுமையாக மாற வாய்ப்புள்ளது என்று சத்யம் நிறுவன வர்த்தக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.