பதவியை ராஜினாமா செய்துவிட்டு போராடுங்கள்: சரத்குமார்
சென்னை: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கேற்கும் கட்சிகள் தாங்கள் அரசில் வகித்து வரும் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு போராட்டங்களில் பங்கேற்றால் அதன் வலிமை அதிகரிக்கும். அப்போது தான் தமிழக மக்களிடையே அவர்கள் மீது நம்பிக்கை உண்டாகும்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்காண அனைத்து கட்சிகளும் ஒன்றுகூடி போராட வேண்டும். இதில் காலதாமதம் கூடாது.
அனைத்து தரப்பில் இருந்தும் போராட்டங்கள் நடந்தும், எதிர்ப்பு குரல்கள் எழுந்தும் எந்த பலனும் கிடைக்காமலும் தன் இனம் பூண்டோடு அழிந்துவிடுமோ என்கிற அச்சத்தின், வேதனையின் உச்சகட்டமாக முத்துக்குமார் என்னும் தமிழ் உணர்வுள்ள இளைஞன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
முத்துக்குமாருக்கு ஏற்பட்டதைப்போன்ற போன்ற நிகழ்வு தமிழக மண்ணில் தொடர்ந்துவிடக் கூடாது என்பதை வேதனையோடு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற 4ம் தேதி தமிழகத்தில் பொது வேலை நிறுத்தமும், அதையடுத்து 7ம் தேதி தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஊர்வலமும் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள் தாங்கள் அரசில் வகித்துவரும் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு போராட்டங்களில் பங்கேற்றால் அதன் வலிமை அதிகரிக்கும்.
உண்மையான பற்றோடு எந்தவித அரசியல் ஆதாயமும் இல்லாமல் இலங்கை தமிழர்களுக்காக இவர்கள் போராடுகிறார்களே என்கிற நம்பிக்கையும் தமிழக மக்களிடையே உண்டாகும்.
போராட்டங்கள் வெறும் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டும் அல்ல, நமது நோக்கம் நிறைவேறும் வரை போராட வேண்டும். அதற்கான தியாகங்களை செய்தாக வேண்டும் என்கிற வகையில் இனிவரும் போராட்டங்கள் அமைய வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications