மலேசிய சிறையில் சிக்கி தவித்த தூத்துக்குடி வாலிபர் மீட்பு
தூத்துக்குடி: முறையான விசா இல்லாமல் மலேசிய சிறையில் சிக்கி தவித்த தமிழர் ஒருவர் அரசின் தலையீட்டை அடுத்து விடுதலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரத்தை சேர்ந்த சுந்தரராஜன் மகன் சுரேஷ். இவர் ஐடிஐ படித்துள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் மலேசியாவிற்கு வேலைக்காக சென்றார். அங்கு திவான் என்ற பகுதியில் உள்ள இரும்பு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முறையான விசா இல்லாததால் சுரேசை மலேசியா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து சுரேஷ் தனது தாயார் மாரியம்மாளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.
இதையடுத்து மாரியம்மாள் தனது மகனை மீட்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் ராதிகா செல்வியை தொடர்பு கொண்டார். இதனை தொடர்ந்து மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சுரேஷை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி ராதிகா செல்வி கேட்டு கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசிய சிறையில் இருந்து சுரேஷ் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து தூத்துக்குடி திரும்பிய சுரேஷ், மத்திய உள்துறை இணை அமைச்சர் ராதிகா செல்வியை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வித்தியசாகர் உடன் இருந்தார்.