வைகோ, திருமா மீது நடவடிக்கை: தங்கபாலு கோரிக்கை
சென்னை: விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்படும் வைகோ, திருமாவளவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளருமான கே.வி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு கூறுகையில்,
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில இடங்களில் சோனியா, பிரதமர் மன்மோகன் ஆகியோரின் உருவ படங்கள், காங்கிரஸ் கொடிகள் எரிக்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக காங்கிரஸ் கட்சி பெரும் தியாகம் செய்துள்ளது. ராஜீவ்காந்தி தனது உயிரையே பலி கொடுத்துள்ளார். இதைவிட வேறு தியாகம் செய்ய முடியாது. உருவ படங்களை எரிப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
சில கட்சிகள் இலங்கைத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்துகிறது. போராட்டத்தின் மூலம் இப்பிரச்னைக்கு வெற்றி காண முடியாது.
முல்லைத் தீவு பகுதியில் உள்ள மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் இலங்கை பிரச்னையை முன் நிறுத்தி மக்களை குழப்பி அதன் மூலம், அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்கள்.
இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். இதனால் அவர்கள் எதுவும் சாதிக்க போவதில்லை. சோனியாவின் கட்டளைப்படிதான் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று, போர் நிறுத்தம் செய்தார்.
உலக அளவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை நேரடியாக ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக விளம்பரம் செய்பவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
இலங்கையில் வாழும் சிங்களர்களுக்கு இணையாக அங்குள்ள தமிழர்கள் வாழவும், ஆட்சி உரிமைக்காவும் காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்று இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியே கூறியுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை தமிழர்களை நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
அங்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், விடுதலைப்புலிகள் அடைத்து வைத்துள்ள அப்பாவி தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்றார் தங்கபாலு.












Click it and Unblock the Notifications