ஜார்க்கண்ட்: 3 நக்சலைட்கள் அடித்துக் கொலை
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராமவாசியை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற மூன்று நக்சலைட்களை கிராம மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்று விட்டனர்.
ராஞ்சி அருகே கோர்பார் என்ற கிராமத்தில் இன்று இச்சம்பவம் நடந்துள்ளது.
அந்த மூவரும் தடை செய்யப்பட்ட ஜார்க்கண்ட் பிரஸ்துதி சமிதி என்ற நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவர்கள். கோர்பார் கிராமத்திற்கு இன்று காலை வந்த அவர்கள் அங்கிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
இதையடுத்து அங்கு கிராமவாசிகள் திரண்டனர். இதைப் பார்த்ததும், அவர்கள் மீது நக்சலைட்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் இரு கிராமவாசிகள் காயமடைந்தனர்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்து கொதித்து எழுந்த கிராம மக்கள் 3 நக்சலைட்களையும் வளைத்துப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அந்தக் கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் விரைந்துள்ளனர்.