பொது வேலைநிறுத்தம் மேற்கொள்ள தடை இல்லை: சுப்ரீம் கோர்ட்
டெல்லி: இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் நாளை அறிவித்துள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் கூறி விட்டது.
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாளை தமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் சரவணகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நாளை சில அரசியல் கட்சிகள் ஆதரவுடன் பந்த்' நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை சுப்ரீம் கோர்ட்டு சட்ட விரோதம் என அறிவித்து பந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இன்று பிற்பகல் இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் வேலை நிறுத்தத்திற்குத் தடை விதிக்க மறுத்து விட்டனர்.
இதுகுறித்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், தமிழகத்தில் நடைபெறவுள்ள பந்த் தொடர்பாக எந்த தடை உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இதில் நீதிமன்றம் என்ன செய்ய முடியும்.
அது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான உரிமை என்று தெரிவித்துள்ளனர்.
மனு மீதான அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications